எபிசோட் - 1
ஊரே களைகட்டியது கோவில் திருவிழாவினால். எங்கு பார்த்தாலும் சந்தோஷ முகங்களும் கலகல பேச்சுக்களுமாகவே இருந்தது. ஐந்து வருடங்களுக்கு பின் கோவில் திருவிழா மறுபடியும் நடக்கிறதென்றால் இருக்காதா பின்னே. எங்கு பார்த்தாலும் சிறு சிறு கடைகளும் நடைபாதை கடைகளுமாக கொண்டாட்டத்துக்கு குறை இல்லை . சிறுவர்களுக்கு ராட்டினங்களும் மிட்டாய் கடைகளுமாக கண்ணைப் பறித்தன .
இளவட்டங்கள் ஊரையே ரெண்டுபடுத்திக் கொண்டிருந்தனர் . அவர்களின் பார்வையெல்லாம் அங்கே சுற்றி வரும் இளம்பெண்களை சுற்றியே வந்தது. அங்கே இருந்த பஞ்சுமிட்டாய் கடையின் அருகில் நின்று வெகு நேரமாக கால் மாற்றி கால் நின்று வெறுத்து போயிருந்தான் முகிலன். பாவம் அவனும் எவ்வளவு நேரமாக தான் காத்திருப்பது? வரவேண்டியவள் வரவில்லையே!
அவனுடன் இருந்த நண்பர்கள் எல்லாம் குதூகலமாக சைட் அடித்தபடியும் கலகலத்தபடியும் இருந்தனர். இவன் மட்டும் பார்வையை மக்கள் செல்லும் வழிநோக்கிப்போவதும் பின் திரும்பி மீழ்வதுமாக இருந்தான். "வருவாளா மாட்டாளா? நான் காத்திருப்பேன் என்று தெரியும் தானே. அப்படி இருந்தும் ஏன் இன்னும் வரவில்லை. ஒரு வேளை வீட்டில் எதுவும் பிரச்சனையோ ? விடவில்லையோ ? போய் பார்க்கலாமா?" யோசித்தபடியே நின்றிருந்தான்.
அவனது ஆருயிர் நண்பன் திலீபன் "என்ன முகிலா? எங்கயோ வெறிச்சு பார்த்திட்டே இருக்கியே . என்ன விஷயம் ? எதாவது பிரச்சனையா ?" என்றதும் தான் புரிந்தது தன்னை எல்லாரும் பார்ப்பது .
"அப்படிலாம் ஒன்னும் இல்லை மச்சான் . சும்மா தான் வேடிக்கை பார்க்கிறேன் . ஆமாம் எங்கே உன்னோட ஆளு ? இன்னிக்கு காட்டேறேன்னு சொன்னியே ?" என்று சொல்ல , "அடப்பாவி அப்போ நான் காட்டினப்போ நீ பார்க்கலையா ?" என்று முகிலனை பார்த்து முறைத்தவன் இவனிடம் "சொல்லு முகிலா என்ன பிரச்சனை ?" என்றான் .
நண்பனல்லவா சரியாக யூகித்தான் எதோ பிரச்சனை என்று. முகிலனுக்கு நன்கு தெரியும் திலீபனிடம் பொய் சொல்லவோ எதையும் மறைக்கவோ முடியாதென்று . அதனால் தன் மனதை அழுத்தும் பிரச்சனையை பற்றி சொல்ல நண்பனின் மனம் அறிந்த திலீபனோ "அந்த புள்ளயாடா ? எப்படிடா ? குனிஞ்ச தலையை நிமிராவே மாட்டாளேடா ? எப்படி முகிலா?" சுற்றுப்புறம் மறந்து குரலை உயர்த்த அவனது வாயைப் பொத்தினான் முகிலன்.
"கத்தியே எல்லாருக்கும் சொல்லிருவ போலயே . மெதுவா பேசேன் மச்சான் ." பாவமாய் கேட்டான் முகிலன் . திலீபனுக்கு ஆச்சரியமாகி போனது . தன் நண்பனுக்கு இப்படி எல்லாம் பயப்பட கூட வருமா? அவனுக்கு தெரிந்த முகிலன் எதற்கும் யாருக்கும் அஞ்சாதவன் . முகிலனும் திலீபனும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள் . முகிலன் அந்த ஊர் பெரிய குடும்பத்தின் ஒரே வாரிசு . ஆறடி உயரமும் தேக்கினை போன்ற தேகமும் கருகருமீசையும் ஆளை மயக்கும் தோற்றமும் கொண்டவன் .
இவனின் மீது காதல் கொண்ட பெண்கள் ஏராளம். ஆனால் இன்று வரை தன் நண்பன் யாரையும் ஏறெடுத்து பார்த்ததை திலீபன் கண்டதில்லை . சில சமயம் இவன் என்ன முனிவனா என்று கூட தோன்றியதுண்டு . ஆனால் அப்படிப்பட்டவன் இன்று ஒருபெண்ணின் வரவிற்கு இப்படி தன்னுடைய வேலை எல்லாம் விட்டுவிட்டு வந்து நிற்கிறான் என்றால் உண்மையில் அந்தப் பெண் மிகவும் கொடுத்து வைத்தவள் தான் என்றே தோன்றியது .
நண்பனின் தோளைத்தட்டி அவனுக்கு நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை கொடுத்தபடி இருக்கும் போதே திடீரென முகிலனின் பார்வை எங்கோ பரபரத்தது . நண்பனின் பார்வையை தொடர்ந்து திலீபன் பார்க்க அங்கு தோழிகளுடன் மெல்ல அன்னநடை பயின்று வந்தாள் நித்திலா . மஞ்சள் வர்ண பாவாடையும் சிவப்பு வர்ண தாவணியும் அணிந்து எதோ தேவலோக கந்தர்வ கன்னிகையாகவே தோன்றினாள்.
நித்திலாவிற்கு தனக்காக ஒருவன் காத்திருக்கிறான் என்றுகூட தெரியாது போல. அவள் தன் தோழிகளுடன் எதோ பேசிச் சிரித்தவாறே அங்கிருந்த கடைகளில் என்னென்ன இருக்கிறது என்று பார்க்கதொடங்கினாள் . முகிலன் அவளருகே சென்று "நிலா " என்றழைக்க அவளோ காதே கேளாதவள் போல் கடந்து சென்றாள்.
"என்னடா முகிலா ?" கேள்வியாக திலீபன் பார்க்க இவனோ அங்கு எதுவுமே நடவாததுபோல அவள் பின் செல்ல தயார் ஆனான் .
நிலா வருவாள் !!!!!!
— “மழையாக நீ குடையாக நான்” கதையிலிருந்து ஒரு பகுதி
✍️ எழுத்தாளர்: Gowri
இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது

Comments
Post a Comment