எபிசோட் - 2
தனக்காக ஒருவன் காத்திருப்பதைப் பார்த்ததாகவோ இல்லை அவன் தன் பின்னே வருவதை கண்டுகொண்டதாகவோ கூட காட்டிக் கொள்ளாமல் தன் தோழிகளுடன் நித்திலா அடுத்தடுத்த கடைகளை பார்க்கப் போனாள். முகிலனும் அயராது அவள் பின்னோடு சென்றான். இவன் பின்னால் சென்ற திலீபனுக்கோ “என்னடா நடக்குது இங்கே” மனநிலை தான்.
தன் நண்பனை எப்போதும் மிடுக்காகவே பார்த்துவிட்டு இப்போது இப்படி ஒரு பெண்ணின் பின்னே வெறெதையும் பற்றி லட்சியம் செய்யாமல் செல்வதைப் பார்க்க ஒருபக்கம் ஆச்சரியமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. அப்படியென்ன அந்தப் பெண்ணிடம் கண்டுவிட்டானென இவன் இப்படி போகிறான் என்ற ஆதங்கமே மிஞ்சியது.
“டேய் மச்சான்! என்னடா ஆச்சு! அந்தப் பிள்ளை தான் உன்னை கண்டுக்கவே இல்லையே. எதுக்குடா இப்படி அவ பின்னாடியே போற?” என்றான் திலீபன். ஒருநிமிடம் நின்று அவனை ஆழ்ந்த பார்வை ஒன்றைப் பார்த்துவிட்டு “இத்தனை பேர் சுத்தி இருக்கும் போது அப்படித்தான்.” என்றான். பின் எதுவுமே நடவாதது போல் மீண்டும் பின்தொடரும் வேலையைத் தொடங்கினான்.
வேறு யாராவதாக இருந்தால் திலீபன் “போடா நீயுமாச்சு உன் ஃபாலோ பண்ற வேலையுமாச்சு” என்று விலகியிருப்பான். ஆனால் போவது தன் உயிர் நண்பனானதால் இவனும் அவன் பின்னால் செல்லத் தொடங்கினான். “டேய் முகிலா! இதெல்லாம் நல்லாவா இருக்கு? இப்படி பொம்பளபிள்ளைங்க பின்னாடி சுத்தறதை யாராவது பார்த்தா என்னாகறது?” என்று கூட கேட்டுப் பார்த்தான்.
இதற்குள் வளையல் கடையை ஆக்கிரமித்திருந்த பெண்கள் கும்பல் அங்கிருந்து மெல்ல கீழே பூக்கடை போட்டிருந்த பெண்ணிடம் பேரம் பேச அமர்ந்தனர். திலீபன் தான் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்பதாய் நித்திலாவின் அருகில் சென்றவன் “ஏங்க இது உங்களுக்கே நல்லாருக்கா? ஒருத்தன் அப்போதுலேர்ந்து உங்க பின்னாடியே வர்றானே, அவனை என்னனு கேட்போம்னு யோசிக்க மாட்டீங்களா?” என்றாள் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
முகிலன் இவன் ஏதாவது பேசி ஏடாகூடம் செய்யப்போகிறான் என்ற பயத்தில் இவனது கையைப் பிடித்து இழுத்த வண்ணம் இருந்தான். இவர்கள் இருவரையும் ஒருமுறை முறைத்துப் பார்த்த நித்திலா “யாருக்கு பேசனுமோ அவங்களை அந்த தேரடிப் பக்கமா வரச் சொல்லுங்க. என்ன பேசனுமோ பேசிரலாம்.” என்று விட்டு நகன்றாள்.
திலீபன் எப்புடி என்பதாய் முகிலனைப் பார்க்க அவனோ அங்கே நின்றால் தானே! அவன் தேரடிப் பக்கமாய் பறந்துவிட்டானே. இவர்கள் இப்படி பேசுவதற்கே ஆள் வைத்து தான் பேசுகிறார்கள் என்றால் இவர்களுக்குள் என்ன தான் ப்ரச்சனை? என்று யோசித்தபடி மெல்ல தேரடியை நோக்கி நடந்தான் திலீபன்.
தேரடியை அடைந்த முகிலன் 'அவள் வருவாளா' என்று கிழக்கும் மேற்குமாய் பார்த்தபடி நின்றிருந்தான். “ஹுக்க்ம்ம்” என்று இவனுக்குப் பின்னிருந்து யாரோ செறுமுவது கேட்டது. திரும்பும் முன்னமே அவனுக்குத் தெரிந்தது அவள் அவனவள் தான் என்று. மெல்லத் திரும்பியவன் “நிலா! ஏன் என் மேல கோவமா இருக்க? நானும் காலைல இருந்து இங்கேயே தான் உனக்காக காத்திருக்கேன் தெரியுமா?” என்றான் பாவமாய்.
“இந்தா! இப்படி பாவமாலாம் முகத்தை வச்சுகிட்டு பேசக்கூடாது. அவ்வளவு அக்கறை இருக்கிறவன் தான் ரெண்டு வாரமா ஆளைக்காணோமா? வந்துட்டாங்க நிலா கலான்னு. போவியா!” என்று கடுகாய் பொறிந்தாள் நித்திலா. சரி ஆளு செம்ம கோவத்துல இருக்கா. நாம் கொஞ்சம் சைலணடா தான் இருக்கனும் என்று முடிவெடுத்த முகிலன் “நான் பாவமில்லையா” என்று முழிக்க அடுத்த கட்ட தாக்குதலுக்கு ஆளானான்.
“இந்த திருட்டு முழி தானே வேணாங்கிறது. இப்படியே அப்புறாணி மாதிரி நடிக்காத. தெரியும் தானே உனக்கு, நான் உனக்காக காத்திருப்பேன்னு. ரெண்டு வாரமா காணாமப் போய்ட்டு இப்போ வந்து கதை பேசறத பாரு. ஏன் இப்படி பண்ண மாமா?” என்றாள் நித்திலா.
இப்போது நிலாவை தன்புறம் இழுத்துக் கொண்டு முகிலன் “உனக்கே தெரியுமே நிலா! நம்ம தோப்புல காய்ப்பறிப்பு நடக்குது. பார்க்க ஆளில்லை. நாந்தான் போய் நிக்கனும். அதான் வரமுடியல. எல்லாம் தெரிஞ்சிருந்தும் என்செல்லம் இப்படி கோவப்பட்டா நான் என்ன பண்றது?” என்றான் அவளது காது மடல்களை கவ்வியபடி.
“ஐயா ராசா நீங்க பெரிய பண்ணக்காரரு தான். எப்பவுமே வேலை வேலைன்னு இருக்க பெரிய தொழிலதிபர் தான். உங்களுக்கு எங்களப் பார்க்க வர நேரமிருக்காது தான். இப்போ மட்டும் எதுக்கு வந்தீங்களாம்? போய் வேலைய பார்க்க வேண்டியது தானே” என்றாள் அவனிடம் இருந்து விடுபட முயன்றபடி.
“இப்படி கோவிச்சா நான் என்ன செய்ய நிலா. நான் பாவமில்லையா” என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றான் முகிலன். “வேலையிருக்குனு தெரிஞ்சவரு எதுக்கு என்னை மாந்தோப்புக்கு வரச்சொன்னாங்களாம்? கேனச்சி மாதிரி நான் வந்து காத்துக்கிடந்தேன். அதுவும் வீட்டுல அவ்வளவு ப்ரச்சனையை வச்சுகிட்டு” என்றாள் கோபமாக.
“ஐயோ மறந்தே போனேன் நிலா. மன்னிச்சிருடா தங்கம். அன்னிக்கு அந்த ஏழுவழி உரண்டைய இழுத்திட்டான். அதுல பஞ்சாயத்தா போச்சு. அந்த குழ்பபத்துல மறந்துட்டேன் நிலா. மாமனை மன்னிச்சிருடா” என்றான் பதறிப்போய். “ஹுக்க்ம்ம் இன்னிக்கு பார்க்க வர்றத மறந்தவரு நாளைக்கு எங்களை மறக்கமாட்டீங்கனு என்ன நிச்சயம். நித்திலா!! நல்ல ஆளைப்பார்த்த காதலிக்க!! போதும்யா சாமி “ என்று அவனிடம் இருந்து விலகி கோபமாக தள்ளிச் சென்று நின்று கொண்டாள்.
அவளின் பின்னோடு போய் இடையோடு அணைத்தபடி முகிலன் “அப்படிலாம் மறக்கக்கூடிய ஆளா நீ நிலா. என் உயிரோட கலந்துட்டடீ. இன்னுமா புரியல உனக்கு? அதான் பேசாம வா கல்யாணம் கட்டிக்கலாம்னு சொன்னா அதுக்கும் ஒத்துக்க மாட்டேன்கற. நான் என்ன தான் செய்யட்டும் சொல்லு. எவ்வளவு நாள் நானும் காத்திருக்க?” என்றான் முகிலன் அவளது தோள்களில் தன் இதழ்களைப் பதித்தவாறே.
கிறங்கிப்போய் இருவரும் நின்ற நேரம் “ஓ இந்த வேலை பண்றதுக்கு தான் நீ வீட்டில அவ்வளவு காரணம் சொல்லிட்டு வந்தியா? சிறுக்கி உனக்கு இவ்வளவு திமிரா? வாடி வீட்டுக்கு” உறுமலாய் குரல் வந்த திசையை நோக்கி இருவரும் பதறி திரும்ப…
நிலா வருவாள்!!!!!!
— “மழையாக நீ குடையாக நான்” கதையிலிருந்து ஒரு பகுதி
✍️ எழுத்தாளர்: Gowri
இந்த படைப்பு எழுத்தாளரின் அறிவுசார் சொத்து.

Comments
Post a Comment