மனதிலிருந்து... சாரல்மழை
‧₊˚❀༉‧₊˚.
இதுவரை எங்களுடன் இணைந்து சாரலில் நனைந்த அனைத்து வாசக அன்பர்களுக்கும் அகம் நிறைந்த ஆயிரம் ஆயிரம் நன்றிகளும் ப்ரியங்களும் 💜
சாரலைப் பற்றி என்ன சொல்ல...
ஒரு சில்லிட்ட கருக்கல் வேளையில் நிகழ்ந்த மின்தடைக்கு பின்னான அமைதியில், காற்றோடு கலந்து கரைந்து வரும் மெல்லிசையின் நீட்சிதான் இந்த மென்சாரல்.
யெஸ்! இது ஒரு பொன்மாலை பொழுதில் தொடங்கியது..
எந்தவித முன்னேற்பாடுகளும் மெனக்கெடல்களுமின்றி சரளமாய் சாரல்மழை பொழிந்த எழுத்துக்களை எடுத்துக் கோர்த்த மென்னீல வண்ணத் தோரணம்.
அதிரூபன்- இவனை என்னவென்று சொல்ல? அதுவும் கதை முழுக்க அவனே நிறைந்து நிற்கையில். அன்பு கொள்வதில் சுகிப்பவன். இது இவனது அன்புலகு!
இன்னமும் நினைவிருக்கிறது. இந்தக் கதை எழுதிய காலத்தில் வேளைகளையும்-பாடல்களையும் ஒப்பிட்டு ஓயாமல் பேசிப் பேசி சுற்றியிருப்போரைக் கடுப்பேற்றியது.
எழுதுவது எத்தனை சுகமோ அதே போல் எழுத்தைப் பற்றிப் பேசுவது அதைவிட அலாதி இன்பம்.
இதுவரை பொறுமையாக வாசித்துப் பயணித்த உங்களுடன் பகிராமல் எப்படி?
🎵காலமும் - கானமும்🎵
வைபா-டேவ்
மழலை வாசம் மாறாத ஒரு இளங்காலைப் பொழுது இவர்கள் உறவு. அந்த காலைப்பொழுது மலர்ந்து எதுவாக வேண்டுமென்றாலும் மாறலாம். இளம் பச்சை நிறத்தில் துளிர்விடத் துவங்கிய கொண்டாட்டமும், உல்லாசமுமான ஓர் உலகம்.
மனோ-தென்னல்
பச்சை பசேலென்ற ஒரு பூங்காவில், யூகலிப்டஸ் வாசனைக்கு நடுவில் கைகோர்த்து நடை பயிலும் அழகிய சந்தியா காலம் இவர்கள் உறவு. இது காதல் இல்லை. நட்பு மட்டுமே என்றுமில்லை. காதல் துளியும் கலக்காத ஆத்மார்த்த அன்பர்கள்.
அதி-மேகா
அத்தனை காலங்களையும் கடந்து, கனிந்த இனிமையான இரவு வேளை இவர்கள் உறவு. காதல், காதல், காதலென ஒவ்வொரு துளியிலும் காதலும் நட்பும் கலந்த உறவு. பின்னிரவு வேளையில் ஓட்டுக்கூரை மேல் ஏறி, ஒற்றை போர்வையின் கதகதப்பில் அமர்ந்து நட்சத்திரம் பார்க்கும் இதம் நிறைந்த வேளை.
🎵கானம்🎵
சாரலிசையாய் வரும் இரண்டு பாடல்கள்:
இது ஒரு பொன்மாலை பொழுது & புத்தம் புது காலை.
நீங்களும் நிச்சயமாக கவனித்திருப்பீர்கள்தான், இருந்தாலும் நானே ஒரு முறை சொல்லிவிடுகிறேனே?
கதை தொடக்கத்தில் அதிரூபன்-மேகராகா பகுதிகளில் வரும் 'இது ஒரு பொன்மாலை பொழுது' அவர்களது உறவு நிலை காலையுமல்லாது இரவுமல்லாத பொன்மாலைப் பொழுதோடு இணைந்து இனிய பொன்நிலவை நோக்கி மெருகேற தொடங்குவதற்குச் சாட்சி நிற்க
மறுபுறம் மனோ-தென்னல் பகுதிகளில் வரும் 'புத்தம் புது காலை' மொட்டு விட்டு புதிதாக மலரத் துவங்கியிருந்த இளங்காலை உறவின் புதுமொழி.
ஒரே நட்பிலிருந்து மலரும் வெவ்வேறு உணர்வுகளும், உறவுகளும். வெவ்வேறு அர்த்தம் கொண்ட ஒரே வார்த்தையை ஒத்த கதை- மென்சாரலில் நின்வண்ணமோ!
மீண்டுமொரு முறை நன்றி! நன்றி! நன்றி!
சாரல்மழையுடன்,
யஞ்ஞா

Comments
Post a Comment