Operation: கல்யாணம் - 13 [Final]

✍️ எழுதியவர் Yagnya

Operation: கல்யாணம் - 13 [Happily Ever After Begins]


இன்று... 

 

எழில்மொழியின் பார்வை மௌனமாய் அவியை தொட்டது. 

 

"அதுதான் நான் உன்ன முதல் தடவை பார்த்தது. அந்த முகம், அதுல இருந்த கலக்கம், கண்ணீர்.. நான் உடனே வெளில ஓடி வந்து தேடினேன் நீ இல்லை.. உன் யூனிஃபார்ம தவிர எனக்கு ஒன்னுமே தெரியாது. உன் முகம் என்ன ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணிடுச்சு.. அதுக்கடுத்து மறுபடியும் உன்ன பார்த்தேன்.. அந்த ஆக்ஸிடெண்ட்.. ஆனா எதையும் வாய திறந்து சொல்லனும்னு எனக்கு தோனறதுக்குள்ளயே நீ போயிட்ட.. அதிசயமா மறுபடியும் கிடைச்ச வாய்ப்பை கிறுக்குத்தனமா தவற விட்டுட்டேனேனு நான் என்ன சபிக்காத நாளில்லை. அங்க இருந்த மூனு நாளும் நான் அந்த தெருவுக்கு மறுபடியும் மறுபடியும் வந்தேன் அவி.. ஒரு வாட்டியாவது உன்ன திரும்ப பார்த்துட மாட்டோமானு அவ்வளவு ஏங்கினேன்.. நல்ல வேளை.. இப்ப யோசிச்சா அப்படி நான் பார்க்காம இருந்ததே உனக்கு நல்லதுனு தோணுது" அவன் இதழோரத்தில் ஒரு கசந்த முறுவல் தோன்றி மறைந்தது. 

 

"அன்னைக்கு கயனாக்கூட தியேட்டர்ல உன்ன பார்த்தப்போ சத்தியமா  எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரியல.. அதுவும் உன்ன கயனாகூட பார்த்தப்போ இனி உன்ன கண்டு பிடிக்கிறது கஷ்டமா இருக்காதுனு தெரிஞ்சுது.. நிஜமாவே கயனா அடிக்கடி சொல்ற ரோ நீதானு எனக்கு தெரிஞ்சிருக்கல..

 

வேடிக்கை என்னன்னா அவ்வளவு வருஷமும் உன்ன ஒரு தடவை பார்த்துப் பேசிட மாட்டோமானு ஏங்கிட்டிருந்த நான்.. அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சு என் கண் முன்னாடி நீ வந்து நிற்கவும் எதுவுமே செய்ய தோணாம ஓடிட்டேன்.. என்னால உன்கிட்ட பேசக்கூட முடியல.." என்று நிலவில் பார்வையைப் பதித்தவன் 

 

"உன்ன நான் மூனு தடவை பார்த்தேன் அவி, மூனு தடவையும் உன்ன மட்டுமே பார்த்தேன். வேற எதையுமே என்னால பார்க்க முடியல.. எல்லாரும் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு சொல்லுவாங்க.. நான் பார்த்த மூனு தடவையும் முதல் தடவையை விடப் படுமோசமா விழுந்தேன்.. " 

 

அவிரோள் மௌனமாய் அவனைப் பார்த்திருந்தாள். 


ஏதோ நினைவு வந்தவன் போலச் சட்டென அவள் புறம் திரும்பி அமர்ந்தவன் அவள் கைகளைப் பற்றிக்கொண்டான். 

 

"உன்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டேனு மட்டும் நினைச்சுடாத அவி. அதே போல சத்தியமா பரிதாபப் பட்டோ, பாவப்பட்டோ நான் செய்யல.. எனக்கு மத்தவங்க அழுதாலே பிடிக்காது. அப்படியிருக்கப்போ நீ அழுதா எப்படி தாங்கிப்பேன்? எனக்கு பிடிச்ச பொண்ணு பிடிச்சா மாதிரி சந்தோஷமா இருக்கனும்னு ஆசைப்பட்டேன்.. கயனா கேட்கவும் சரினுட்டேன். அதுக்காக இப்போவும் நீ என்கூடவே இந்த கல்யாணத்துலதான் இருக்கனும்னு உன்ன எதிர்ப்பார்க்க மாட்டேன்.  நீ உனக்கு பிடிச்சா மாதிரி இரு, சந்தோஷமா இரு.. நானும் சந்தோஷமா இருப்பேன். அந்த வாழ்க்கைல நான் இருந்தாலும் இல்லாட்டியும்.." என்று தெளிவாகப் பேசியவன் உள்ளுக்குள் உடைவதை அமைதியாகப் பார்த்திருந்தவள் 

 

"ப்ச்! இதுக்குதான் அடுத்தவங்களுக்கு ரொம்ப பார்க்க கூடாதுனு சொல்றது" என்றாள் தோளைக் குலுக்கி அசட்டையாக 

 

அவ்வளவு நேரமும் உணர்ச்சி பொங்கப் பேசிக்கொண்டிருந்தவன் அவளது அலட்சிய குரலில் ஒரு கணம் அதிர்ந்து விழித்தான் 

 

"புரியல அவி.." 

 

"ம்ம்.." என அவன் புறம் திரும்பியவளோ 

 

"கொஞ்சமாச்சும் செல்ஃபிஷா இருந்து தொலையேன் என் பட்டசாராயமேனு சொன்னேன்" என்றுவிட்டு அவள் திரும்பி அமர 

 

அவள் பேசுவது புரிந்தும் புரியாத நிலையில் உறைந்திருந்தவனுக்கு ஊதக்காற்றுடன் சேர்த்து உண்மை நிலவரமும் உட்புக 

 

"ஹே அவி" என்று எழுந்து வந்து அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து அவள் முகம் பார்த்தான். 

 

அவிரோளின் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம், இதழில் இளகும் புன்னகை! 

 

அவள் கன்னம் பற்ற வந்த கைகள் மெல்லத் தயங்குவதைக் கண்டவள் பட்டென அவன் கையில் ஒன்று வைத்துவிட்டு, அப்படியே அவன் கைகளைப் பிடித்து தன் கன்னங்களில் வைத்தாள்

 

"சரியான ட்யூப்லைட்டய்யா நீ! எனக்கு ஓரளவு ஒரு மாசம் முன்னவே தெரியும்" என்றவள் கண்சிமிட்ட 

 

"என்ன?" என அதில் இன்னமும் அதிர்ந்தான் அவன். 

 

"எப்படி?"


"அதான் அன்னைக்கு கயன் ரூம்ல கிட்டார கைல வச்சுட்டு ஃபீல் பண்ணிட்டிருந்தியே! அப்போவே ஏதோ பொறி தட்டுச்சு.. ஆனா இவ்வளவு இருக்கும்னு தெரியல. அப்பறம் சித்தியை கல்யாணத்துக்கு வர வச்சு தாலி கட்டறத பார்க்க வச்சது.. உனக்கு மட்டும்தானே சொன்னேன் நான். எனக்காகதான் நீ  பண்ணேனு புரிஞ்சது. ஆனா இவ்வளவு கிறுக்குத்தனமா என்னையே போ சொல்றளவு பண்ணுவனு நான் எதிர்ப்பார்க்கல.." என்று மீண்டும் அவனை முறைத்தவளின் விழிகளில் நீர்ப்படலம். 

 

அதை பெருவிரல்களால் துடைத்தவன் "தப்பு தான்" என அவள் நெற்றியில் முத்தமிட்டான். 

 

அவள் அவனை விலக்க, மொழி புரியாமல் பார்க்க 

 

"இதுவும் தப்புதான்" என்றவள் அவனை  அருகே இழுத்து இதழ் பதித்தாள். 

 

அவன் முத்தத்திற்குள் சிரிக்க 

 

அவிரோள் "சிரிக்காதடா பக்கி!" என்று அதட்டிட, வளர்பிறை தன் நட்சத்திர பிள்ளைகளை இவர்களது சென்சாரில்லாத முத்தக்காட்சிகளில் இருந்து காப்பாற்ற மேகப்போர்வைக்குள் மறைந்தாள். 

 

சில நிமிடங்களுக்குப் பிறகு... 

 

"ஒன்னு தெரியுமா.. உனக்கு மட்டுமில்லை, எனக்கும் முகம் தெரியாட்டியும் கிட்டார் வாசிச்சு என்னை என்னையே  வச்ச பையன் ஸ்பெஷல்தான்" என்க 

 

மொழி அவளை ஆச்சரியமாய் பார்த்தான்.

 

"ம்ம்.. அன்னைக்கு அவ்வளவு அவசர அவசரமா வீட்டுக்கு போனேன். இப்போ யோசிச்சா போயிருக்க வேணாமோனு தோணுது.. அகில் சித்திக்கிட்ட ஏதோ கேட்டுட்டிருந்தான். அவங்க அது அவியோட பங்கு நீ ஏற்கெனவே சாப்பிட்டல்லனு சொல்லிட்டிருந்தாங்க, அதுக்கு அவன் யாரோ.. யாரோ ஒருத்திக்காக எனக்கு கொடுக்க மாட்டீங்களானு எதோ கோவத்துல கத்திட்டான். அப்போ அவனும் ஸ்கூல்தானே.. சித்தி பட்டுனு வாயில அடிச்சிட்டாங்க.. அக்காவ மரியாதையா பேசுனு. அவன் சின்ன பையன் அவனுக்கு தெரியல. ஆனா அந்த வார்த்தை எங்க இருந்து அவனுக்கு வந்ததுனு அந்த வயசுலயும் எனக்கு புரிஞ்சது.. அப்படியே திரும்பி ஸ்கூலுக்கு வந்துட்டேன். 

 

ஒருவேளை அன்னைக்கு நான் வீட்டுக்கு போகாம இருந்திருந்தா.. அகிலும் ஒரு விதத்துல பாவமோனு எனக்கு தோணிருக்காதுல.." என்றவளின் இமையோரங்களில் மெல்லிய நீர்த் துளி 

 

அவளை அப்படியே அணைத்தவன் "அவன் உன்ன சொந்தமா நினைக்காட்டியும் நீ அவன தம்பியாதான் நினைச்சிருக்க. இது அவனோட லாஸ் அவி" எனத் தட்டிக்கொடுத்தான்.


சில நொடிகள் மௌனத்தில் கழிந்தன.

 

திடீரென, "அவிமா.." 

 

"ம்ம்.."

 

"இந்த பட்டசாராயம் மட்டும் வேண்டாமே.. நான் டீட்டோட்டலர் பையன்" என்றிழுத்தவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் 

 

"நீ டீட்டோட்டலரா இருக்கபோய்தான் பட்டுனு பதமா கூப்பிடறேன். உண்மையான குடிகாரனா இருந்தா கும்மிருப்பேன்!" என்றாள் சவாலாக 

 

அவள் தோரணையில் எழுந்த புன்சிரிப்பில் தலையைச்சைத்தவன் மீண்டும் பார்வையை வானுக்குத் திருப்பிவிட்டான். 

 

நீ இனி பட்டுதான்டா! பழகிக்கோ  

 

"ஏன் மொழி.. நீ பாட்டு வீட்டுல லவ் பண்றேனு சொல்லி பிரச்சனையாக்கிட்டியே, நான் ஓகே சொல்லலைன்னா என்ன செய்திருப்ப?"  கைப்பிடிச்சுவரில் அமர்ந்திருந்தவள் அருகில் இருந்தவன் காலை தட்டினாள்.

 

"நான் ஒன்னும் பொய் சொல்லலையே? நான் ஒரு பொண்ண லவ் பண்றேன், அவகிட்ட இனிமே தான் பேசனும்னுதானே சொன்னேன். அம்மாதான் அதுக்குள்ள ஒன் சைட் லவ்வுக்காக இத்தனை வருஷம் காத்திட்டிருந்தியானு ஒரே அழுகை, சொல்ல முடிஞ்சா சொல்லி அந்த பொண்ண கூட்டிட்டு வா இல்லை, நான் சொல்ற பொண்ண நீ அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கனும். அதுக்கு மனச தயார் பண்ணிக்கோனு சொல்லிட்டாங்க.." என்றவன் பேசிக்கொண்டே போகக் காலாட்டிக்கொண்டிருந்த அவிரோள் அப்படியே நின்றாள் 

 

அதை உணர்ந்த எழில் புருவம் சுருங்க "என்னாச்சு?" என்று கேட்க 

 

"அப்போ உங்க வீட்டுல உடனே கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஃபோர்ஸ் செய்யலையா?" என்றாள் சந்தேகமாய் 

 

"சொன்னாங்கதான். பட் நீயே என் பேரண்ட்ஸ் பார்த்தல்ல.. சரியான சாஃப்டீஸ். நான் ஒரேயடியா முடியாதுனு சொன்னா கைய கால கட்டியா கல்யாணம் செய்வாங்க?" என்று பேசிக்கொண்டே போனவனின் பேச்சு அவள் முகமாறுதலில் தடைப்பட்டது

 

"ஏன்.. என்னாச்சு?" 

 

கயன்ன்ன்ன்ன்ன் 

 

"நீ எதுக்காக இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்ட? ஐ மீன் கயன் உன்கிட்ட என்னனு சொன்னா?" 

 

ஒன்றும் புரியாமல் விழித்தவன் பிறகு ஏதோ புரிவதுபோலிருக்க 

 

"உன் வீட்டு விஷயம் சொன்னா.. என் சிட்டுவேஷனுக்கும் இது சரியா இருக்கும்னு.." என்றவனின் பேச்சு தடைப்பட்டது 

 

"உன்கிட்ட என்ன சொன்னா?" என்றான் 


"உன் வீட்டு நிலைமை மோசமாயிருக்கு, உனக்கும் அந்த ஆத்யானால பயம்.. என் சிட்டுவேஷனுக்கும் இது சரியா இருக்கும்னு சொன்னா" என்றவளின் வார்த்தைகள் ஒரு கணம் கடைவாயில் அரைபட்டன 

 

எழில்மொழி வாய்விட்டுச் சிரித்தவன் 

 

"சரியான குட்டிச்சாத்தான்! ஒரே விஷயத்தை மாத்தி மாத்தி.. எவ்வளவு தில்லு முல்லு! எனக்கு ஆத்யா விஷயம் கஷ்டம்தான் ஆனா அதை எப்படி சேர்த்திருக்கா!" என்று விழுந்து விழுந்து சிரிக்க, 

 அவிரோளுக்கு அத்தனையும் புரிந்துபோனது.  

"அவளுக்கு இருக்கு! நாளைக்கழிச்சு ஊருக்கு போறோம்ல.. பாத்துக்கறேன்" என்றவளுக்கும் சிரிப்புதான் வந்தது. 

 

சரியான தொல்லை நீ கயன்!

 

இரண்டு நாட்களுக்குப் பிறகு... 

 

ஊரில் இருந்து திரும்பி வந்த இருவரும் நேராக அவர்களுக்கென வசுதா ஏற்கெனவே ஏற்பாடு செய்துவிட்ட  அவர்களது புதுவீட்டிற்கே வந்துவிட்டனர். 

 

எழில் கதவைத் திறந்ததும், அவனுடன் சேர்ந்து ஒவ்வொரு பையாக உள்ளே எடுத்து வைத்தவள், பிறகு ஒவ்வொரு அறையாகச் சென்று பார்க்க, எழிலும் கதவை தாழிட்டுவிட்டு வந்தான். 

 

"அவி இரு! நானும் வரேன்.. அப்படியே போய் சித்தியை பார்த்துட்டு-" என்றோடி வந்தவன் அவிரோள் படுக்கையறை வாசலில் அப்படியே நிற்கவும் சந்தேகமாய் அவளிடம் வர, 

 

ஓ மை கடவுளே! கயனா!!! 

 

படுக்கையறை முழுதும் நேற்றிரவுதான் 

அலங்கரித்திருக்க வேண்டும்! 

 

"வெல்கம் மை பட்டீஸ்!" எனப் பறந்த பலூனை தாண்டி மெத்தையில் கிடந்த இதய வடிவ பரிசு பெட்டியையும் அதற்கு மேலிருந்த குட்டி கடல் பச்சை வர்ண கார்ட்டையும் பார்த்தவன் அவியை பார்க்க அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். 

 

எழில் கார்ட் மீதிருந்த சாக்லேட்பாரை நகர்த்திவிட்டு அதைக் கையிலெடுத்தான். நல்ல கொட்டை கொட்டையான கையெழுத்தில் கயனாவே தெரிந்தாள். 

 

"இந்நேரம் கண்டுபிடிச்சிருப்பீங்க.. சாரி மை லவ்லீஸ்! நான் என்ன செய்ய? அவன் பயங்கர நல்லவன், நீ பயங்கரமான நல்லவ. நானே சொல்லக்கூடாதுடா எலி, ஆனா நீயா பேசியிருந்தா ரோ பாட்டியான பிறகுதான் நீ அவ பேரே கேட்டிருப்ப.. ஏன் ரோ அப்பாம்மா மட்டும்தான் அரேன்ஜ் மேரேஜ் பண்ணி வைக்கனுமா?  எனிவேஸ்! ஹேப்பி மேரீட் லைஃப்டா தங்கங்களே!! 


பி.கு. தயவுசெய்து என் வீட்டுப்பக்கம் கொஞ்ச நாள் வராதீங்க! கோவம் குறைஞ்சதும் சந்திக்கலாம். டா டா!" 

 

என்று முடிந்திருந்தது கடிதம் 

 

அவிரோள் எழிலைப் பார்க்க 

 

அவன்,"நான் போய் கார எடுக்கறேன்" என்றோடினான். 

 

அடுத்த பத்தாவது நிமிடம் இருவரும் கயன்னங்கையின் வீட்டு வளாகத்தில் நுழைந்துகொண்டிருந்தனர். வழமைக்கு மாறாக வாசலில் இரண்டு மூன்று வாகனங்கள் நிற்க, முதலில் அதைப் பெரிதாக எடுக்காதவர்கள் வீட்டினுள் நுழைய.. 

 

அங்கு ஒரு கும்பலே இருந்தது. நீல நிற புடவை ஒன்றில் கயன்னங்கை முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஒரு சோஃபாவில் அமர்ந்திருந்தாள். அவர்களுக்கு முன்னால் பெரிய ஜமக்காளம் விரிக்கப்பட்டு, அதில் பூ, பழமென அணிவகுத்திருந்தது. 

 

மெல்ல மெல்லச் சூழ்நிலை புரியத் துவங்க இருவருமே ஸ்தம்பித்தனர். 

 

எழிலின் இதழ்கள் மெல்ல முணுமுணுத்தன 

 

"சதுர்" என. 

 

ஒரு பக்க சோஃபாவில் அமர்ந்திருந்த இளைஞனின் அமைதி பார்வை கயன்னங்கையை மௌனமாய் அளவிட்டுக்கொண்டிருக்க, கயன்னங்கை குனிந்த தலையை நிமிர்ந்திருந்தால் அவன் பஸ்பமாகியிருப்பானோ என்னவோ! பார்வையில் அவ்வளவு உஷ்ணம்!

 

அவிரோள் விழிகள் தெறித்துவிடுமளவு விரிந்தது. 

 

இவர்களை கண்டுவிட்ட கயன்னங்கையின் அம்மா அவசர அவசரமாக பெரிய புன்னகையுடன் வந்தார் 

 

"நம்ம கயனாவ பொண்ணு பார்க்க வந்திருக்காங்க" என்று. 

 

அத்தனை பேருக்கும் அவள் ஒரு கணக்கு போட்டிருக்க, அவளுக்கும் சேர்த்து ஒருவன் கணக்குப் போட்டு வைத்திருந்திருக்கிறான்!!

சதுர் இதழில் ஒரு மர்மப் புன்னகை நிலைத்திருந்தது.

இனி operation: காதல்? (விரைவில்...)

***சுபம்*** 

— “Operation: கல்யாணம்” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Yagnya 

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது

 



Comments